Friday, January 10, 2014

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய இளைஞர் தின மரக்கன்று நடும்விழா



பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரி இளைஞர் நலத்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து 10.1.14 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

 இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.தமிழ்த்துறைப் பேராசிரியர் அ.மு.அயுப்கான்,அரபுத்துறைப் பேராசிரியர் எஸ்.முகம்மது உசைன்,இயற்பியல்துறைப் பேராசிரியர் எஸ்.எம்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கல்லூரி முதல்வர் பேராசிரியர் எம்.முகமது சாதிக் தேசிய இளைஞர் தின மரக்கன்று நட்டார்.

மாணவர் பேரவைத் தலைவர் அப்துல் முனாப்,முகம்மது சல்மான்,சுரேஷ்,மகாராஜா மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.மாணவர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் நலத்துறையும் மாணவர் பேரவையும் இணைந்து செய்திருந்தது.

படத்தில்: பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய இளைஞர் தின மரக்கன்று நடும்விழாவில் கல்லூரி முதல்வர் எம்.முகமது சாதிக் மரக்கன்றினை நடுகிறார்.அருகில் இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் ச.மகாதேவன், அரபுத்துறைப் பேராசிரியர் எஸ்.முகம்மது உசைன் மற்றும் மாணவர்கள்.

செய்தி:முனைவர்.ச.மகாதேவன்
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
திருநெல்வேலி

Sunday, March 10, 2013

பயணப்பொழுதுகள்…….








     வெகுநாட்களாயிற்று
     வெளியூர்ப் பயணம் போய்….
     காயப் போட்ட கரிச்சேலையாய்
     நீண்டு கிடக்கும் சாலைகள்…

     இரப்பர் உருளைகளைத் தேய்த்தபடி
     சாலையில் பறக்கும் அவசர ஊர்திகள்

     இயற்கையைப் புதைத்த
     இரகசிய மகிழச்சியில்
     வயற்காடுகளை அழித்து
     நாசமாக்கியதன் நினைவாக
வண்ணக் கற்கள்

     இலவச உணவுக்காக
     இருபது நிமிடமாய்
     காத்துக் கிடக்கும்
     பேருந்துகள்

     மாலை நாளிதழை மடித்துப்
     பேருந்துக் கண்ணாடியைத் துடைக்கும்
     மேட்டேல் பையன்கள்
    
     பட்ஜெட் பற்றாக்குறையால்
     கட்டிவந்த பொட்டலம் பிரிக்கும்
     திருவாளர் பொதுசனம்

     திரும்பத் திரும்ப
     ஒரே காட்சிகள் . . .
     இப்போதெல்லாம்
     பயணிப்பதைக்
     குறைத்துக் கொண்டேன்
 
     பயணிப்பதை விடப்
     பயணித்த பொழுதுகளில்
     பயணிப்பது சுகமானது